செய்திகள்
பர்கூர் அருகே மொபட் மீது லாரி மோதல்: கணவன்-மனைவி பலி
பர்கூர் அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் கணவன்-மனைவி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் பக்கமுள்ள வெத்தலைத் தோட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 52). விவசாயி. இவருடைய மனைவி சித்ரா (40). நேற்று காலை இவர்கள் 2 பேரும் ஐகுந்தம் அருகே ஒட்டனூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.
ஐகுந்தத்தை அடுத்த அனகோடி அருகே சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் லாரியின் அடியில் சிக்கி கணவன்-மனைவி 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான கிருஷ்ணன், அவரது மனைவி சித்ரா ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்ததும் கிருஷ்ணனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதது உருக்கமாக இருந்தது.
விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள். விபத்தில் கணவன்-மனைவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.