செய்திகள்
கோப்புபடம்

வேலைக்கு சென்ற பெண் சுடுகாட்டில் பிணமாக கிடந்தார் - கொலையா? போலீசார் விசாரணை

Published On 2020-07-26 14:17 GMT   |   Update On 2020-07-26 14:17 GMT
திருச்செங்கோடு அருகே, வேலைக்கு சென்ற பெண் சுடுகாட்டில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு அருகே குமரவேலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். தறித்தொழிலாளி. இவரது மனைவி நாகலட்சுமி (வயது 45). சமையல் கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் சமையல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இரவு வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை பெரியமணலி அருகே ஜேடர்பாளையம் சுடுகாட்டில் ஒரு பெண் பிணமாக கிடப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து நாகலட்சுமியின் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது அது நாகலட்சுமிதான் என்பது தெரியவந்தது.

பிணமாக கிடந்த அவரது உடலில் காவி வேட்டியும், மஞ்சள் வேட்டியும் சுற்றப்பட்டு இருந்தது. இதுகுறித்து ராஜேந்திரன் எலச்சிபாளையம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து நாகலட்சுமி கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு காரணம் உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவில்தான் அவரது சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News