செய்திகள்
கைது

பள்ளிபாளையம் அருகே ஆடு திருடிய 3 வாலிபர்கள் கைது

Published On 2020-07-15 09:57 GMT   |   Update On 2020-07-15 09:57 GMT
பள்ளிபாளையம் அருகே ஆடு திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிபாளையம்:

பள்ளிபாளையத்தை அடுத்த நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் சீரங்கன் (வயது 70). விவசாயி. இவரது தோட்டத்தில் வளர்த்த ஒரு ஆட்டை நேற்று 3 மர்ம நபர்கள் திருடி கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றனர். இதை பார்த்த சீரங்கன் பின்னால் அவர்களை துரத்தி சென்றார்.

அப்போது நத்தமேடு ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக நடந்து சென்ற விஜயா மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 3 பேரும் கீழே விழுந்தனர். விஜயாவும் காயம் அடைந்தார். பின்னால் வந்த சீரங்கன் அங்கிருந்தவர்கள் உதவியுடன் 3 பேரையும் பிடித்து பள்ளிபாளையம் போலீசில் ஒப்படைத்தார். காயம் அடைந்த விஜயாவை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சாமண்டூர் பகுதியை சேர்ந்த சுஜீத் (22), தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியை சேர்ந்த சிவராஜ் (24), வினோத் (26) என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் ஆட்டையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News