செய்திகள்
வெடிகுண்டு தாக்குதல் (கோப்புப்படம்)

சின்னமனூர் அருகே தொழிலாளி மீது வெடிகுண்டு வீச்சு

Published On 2020-07-13 15:43 GMT   |   Update On 2020-07-13 15:43 GMT
சின்னமனூர் அருகே தொழிலாளி மீது வெடிகுண்டு வீசிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சின்னமனூர்:

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டையை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 47). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் காலை பாலமுருகன் தனது மனைவி மகேஸ்வரி, மகள் பத்மசுருதி ஆகியோருடன் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க சின்னமனூர் வந்தார். பின்னர் அவர் குடும்பத்தினருடன் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார்.

மார்க்கையன்கோட்டை பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் அவரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் திடீரென நாட்டு வெடிகுண்டை எடுத்து பாலமுருகன் மீது வீசினர்.

ஆனால் வெடிகுண்டு பாலமுருகன் மீது படாமல் அருகில் விழுந்து வெடித்தது. இதில் பாலமுருகனின் வலது காலில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து சின்னமனூர் போலீசில் பாலமுருகன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக வெடிகுண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வெடிகுண்டு வீசியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். அவர்கள் பிடிபட்டால்தான் வெடிகுண்டு வீசப்பட்டதற்கான காரணம் தெரியவரும். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News