செய்திகள்
கமலம்மாள் - தங்கராஜ்

கணவரால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண்,சிகிச்சை பலனின்றி பலி

Published On 2020-07-11 09:29 GMT   |   Update On 2020-07-11 09:29 GMT
கோவையில் கணவரால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். எனவே கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:

கோவை புலியகுளம் அருகே அம்மன்குளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 55). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கமலம்மாள் (51). இவர்களுடன் கமலம்மாளின் தாய் காளியம்மாளும் (71) வசித்து வந்தார். இந்த நிலையில் தங்கராஜ் குடித்துவிட்டு வந்ததால், கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த தங்கராஜ், தனது மனைவி மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார். வலி தாங்க முடியாமல் துடித்த கமலம்மாளை காப்பாற்ற சென்ற காளியம்மாளுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தாய், மகளை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் போலீசார், கொலை முயற்சி என்ற பிரிவின் கீழ் தங்கராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற காளியம்மாள் குணமடைந்து வீடு திரும்பினார். தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய கமலம்மாளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து தங்கராஜ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு உள்ளது.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News