செய்திகள்
என்எல்சி விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் - என்எல்சி நிர்வாகம்
என்.எல்.சி. விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என என் எல் சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை:
நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தின் 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் நேற்று காலை திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 16 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
என்எல்சி அனல்மின் நிலைய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, உள்துறை மந்திரி அமித்ஷா முதலமைச்சர் பழனிசாமியுடன் இன்று தொலைபேசியில் பேசினார்.
அப்போது என்.எல்.சி. விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், என்.எல்.சி. விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.
மேலும், படுகாயம் அடைந்தோருக்கு இடைக்கால நிவாரணமாக 5 லட்சம் ருபாய் இழப்பீடு வழங்கப்படும். உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்கப்படும் என என்.எல்.சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.