செய்திகள்
உயிரிழந்த தந்தை, மகன்

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்- நீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்தார் எஸ்.பி.

Published On 2020-06-26 06:18 GMT   |   Update On 2020-06-26 06:18 GMT
சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் விசாரணைக் காவலில் இறந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி. நீதிமன்றத்தில் நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
மதுரை:

கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 

தந்தை, மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘விசாரணைக் கைதி மரணம் போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இதற்காக காவல்துறையினருக்கு அரசு உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி நீதித்துறை நடுவர் விசாரணை அறிக்கை மற்றும் மாவட்ட எஸ்பி நிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். அதன்படி தூத்துக்குடி எஸ்.பி. இன்று நிலையை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை, அவர்கள் மீதான குற்றச்சாட்டு விவரம், விசாரணை மற்றும் எந்த சூழ்நிலையில் அவர்கள் இறந்தார்கள்? என்பது போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. 

வியாபாரிகளான தந்தை, மகன் உயிரிழப்புக்கு நீதி கேட்டு, தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News