செய்திகள்
அரகண்டநல்லூர் அருகே தொழிலாளி வீட்டில் நகை-பணம் திருட்டு
அரகண்டநல்லூர் அருகே தொழிலாளி வீட்டில் நகை-பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:
அரகண்டநல்லூர் அருகே வீரபாண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 40). தொழிலாளி. சம்பவத்தன்று ராமமூர்த்தியின் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு சாவியை அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் வைத்துவிட்டு வெளியே சென்றனர். இதை நோட்ட மிட்ட மர்மநபர்கள் அந்த சாவியை எடுத்து கதவை திறந்து வீட்டுக்குள் நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றனர்.
இது குறித்த தகவலின் பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், சிவராமகிருஷ்ணன், பொன்னுரங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். திருடு போன நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.