செய்திகள்
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்- உடல்களை வாங்க குடும்பத்தினர், உறவினர்கள் மறுப்பு
சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் இருவரும் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்துள்ளனர்.
நெல்லை:
கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
காவல்துறையை கண்டித்து தொடர் போராட்டம் நடைபெற்றது. இன்று தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், உயிரிழந்த தந்தை, மகன் உடல்கள், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்படுகின்றன. பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.
உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உள்ளதா எனவும் பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்காக பிரேத பரிசோதனை மையத்திற்கு கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் வந்தார். மருத்துவ கல்லூரி முதல்வருடன், மாஜிஸ்திரேட் ஆலோசனை நடத்தனார்.
இதற்கிடையே, தந்தை, மகன் உடல்களை வாங்க மாட்டோம் எனக் கூறி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். கொலை வழக்காக பதிவு செய்யும் வரை உடக்ளை வாங்க மாட்டோம் என்று, ஜெயராஜின் மகள் பெர்சி கூறி உள்ளார். இரட்டை கொலைக்கு என்ன தண்டனையோ அதனை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.