செய்திகள்
கைது

மதுரையில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்- 2 பெண்கள் உள்பட 6 பேர் கைது

Published On 2020-05-23 08:28 GMT   |   Update On 2020-05-23 08:28 GMT
மதுரையில் கஞ்சா விற்க முயன்ற 2 பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 28 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை:

மதுரை மாவட்டம் பரவை கண்மாய்க்கரையில் கஞ்சா விற்பதாக சமய நல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஐயருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு சென்றார்.

அப்போது அங்கு கஞ்சா விற்றதாக செல்லூர் மணவாளநகர், அய்யாவு தெருவை சேர்ந்த காசி நாதன் (வயது 53), உசிலம்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த முத்தையா (55) ஆகிய 2 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் 25 கிலோ கஞ்சா மற்றும் ரூ 1,600 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை எம்.கல்லுப்பட்டி அடுத்த மல்லபுரம் ஜங்சன் பகுதியில் கஞ்சா விற்பதாக எம். கல்லுப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவ்யாவுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அவர் சம்பவ இடத்திற்கு சென்றார்.

அப்போது அங்கு கஞ்சா விற்றதாக மல்லபுரம் ரைஸ்மில் தெருவை சேர்ந்த சுப்புராஜ் மகன் அருண்பாண்டி (21), கருப்பனாம்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் மனைவி மணிப்பிள்ளை ஆகிய 2 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

உசிலம்பட்டி அடுத்த கீரிப்பட்டியில் கஞ்சா விற்பனை செய்வதாக உசிலம்பட்டி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் திவ்யாவுக்கு தகவல் வந்தது. அங்கு சென்ற போலீசார் கஞ்சா விற்ற குமார் (45) என்பவரை கைது செய்து ¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

உசிலம்பட்டி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவபாலன் ரோந்து சென்ற போது கஞ்சா விற்றதாக கீழப்புதூர் சன்னாசி தெருவைச் சேர்ந்த போஸ் மனைவி சித்ரா (வயது 40) என்பவர் பிடிபட்டார். அவரிடமிருந்து 550 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News