சுவாமிமலை அருகே ஆடு திருடிய 3 வாலிபர்கள் கைது
சுவாமிமலை:
கும்பகோணம் அடுத்த சுவாமிமலை அருகே சுந்தரப்பெருமாள் கோவில் பகுதி ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் தனபால். இவர் வீட்டில் 25-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி அதிகாலை ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வீட்டை விட்டு தனபால் வெளியில் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் 3 பேர் தனது ஆட்டை திருடி செல்வது தெரிந்தது.
இதைக்கண்ட அவர் 3 பேரையும் விரட்டி சென்றார். சுந்தரப்பெருமாள் கோவில் ரெயில்வே கேட் அருகில் சென்றபோது கேட் மூடப்பட்டிருந்ததால் 3 பேரும் மோட்டார் சைக்கிளையும், ஆட்டையும் விட்டுவிட்டு தப்பி சென்றனர்.
உடனடியாக தனபால் இதுபற்றி சுவாமிமலை போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
இதில் தனபால் ஆட்டை திருடியது சுந்தரப்பெருமாள் கோவில் பகுதி அண்ணா நகரை சேர்ந்த திருமேணி மகன் ஸ்ரீதர்(21), சத்தியமூர்த்தி மகன் சந்தோஷ்(20), மற்றும் தாராசுரம் பேட்டை தெருவை சேர்ந்த மாதவன் மகன் சுபாஷ்(20) ஆகியோர் என தெரியவந்தது.இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.