செய்திகள்
விபத்து

தஞ்சை அருகே விபத்து- சிறுவன் உள்பட 7 பேர் காயம்

Published On 2020-03-13 09:50 GMT   |   Update On 2020-03-13 09:50 GMT
தஞ்சை அருகே இரும்பு தடுப்பில் கார் மோதி கவிழ்ந்த விபத்தில் சிறுவன் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வல்லம்:

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள நன்னிமங்கலத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 36). செந்தில்குமார் அவருடைய மகன் மாதில் (11) மற்றும் அதே பகுதியை சேர்ந்த மேலும் 5 நபர்களும் சேர்ந்து நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு செல்வதற்காக காரில் சென்றனர். காரை செந்தில்குமார் ஓட்டி வந்துள்ளார்.

தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் தஞ்சை மாவட்ட எல்லை பகுதியான அற்புதாபுரத்தில் சோதனை சாவடி உள்ளது. இந்த சாலையில் வரும் வாகனங்கள் மெதுவாக செல்வதற்காகவும், போலீசார் சோதனை மேற்கொள்ளவும் சாலையின் நடுவே இரும்பு பேரிகாட் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செந்தில் குமார் ஓட்டி வந்த கார் திடீரென நிலைதடுமாறி சோதனை சாவடி நடுவே இருந்த இரும்பு பேரிகாட் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த செந்தில்குமார், அவருடைய மகன் மாதில், சபரிராஜன், ராஜா, ஹரிஹரசுதன், மகாராஜன், மற்றொரு செந்தில்குமார் ஆகிய 7 பேரும் காயமடைந்தனர்.

சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசாரும் அருகில் இருந்தவர்களும் காரில் சிக்கி இருந்த 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News