செய்திகள்
தேனாம்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வீச்சு - மதுரை கோர்ட்டில் 4 பேர் சரண்
சென்னை தேனாம்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வீசிய 4 பேர் மதுரை நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தனர்.
சென்னை:
சென்னை அண்ணா சாலையில் அமெரிக்க தூதரகம் முன்பு உள்ள மேம்பாலத்தில் இருந்து தேனாம்பேட்டை நோக்கி 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் சென்றனர். அப்போது அவர்கள் எதிர்திசையில் சாலை தடுப்புக்கு அந்த பக்கமாக வந்த கருப்பு நிற கார் மீது மோட்டார் சைக்கிளில் இருந்தபடியே 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் பலத்த சத்தத்துடன் குண்டுகள் தரையில் விழுந்து வெடித்தன.
இதில் அருகில் இருந்த சொகுசு காரின் ஷோரூம் மற்றும் அதன் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றும் சேதம் அடைந்தது.
தகவல் கிடைத்ததும் உடனடியாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, தி.நகர் துணை கமிஷனர் அசோக்குமார், தேனாம்பேட்டை உதவி கமிஷனர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அதற்குள் மோட்டார் சைக்கிளில் வந்து வெடிகுண்டு வீசிய இருவரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். வெடிகுண்டு வீச்சில் இருந்து தப்பிய காரும் வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டது.
இதனால் வெடிகுண்டுகளை வீசியவர் யார்? யாரை குறிவைத்து குண்டுகள் வீசப்பட்டன? என்பது பற்றி எந்த தகவல்களும் உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டுப் பார்த்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், தேனாம்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் கமருதீன், ராஜசேகர், பிரசாந்த், ஜான்சன் ஆகிய 4 பேர் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தனர்.