செய்திகள்
7 நாட்களாக நீடித்த கேன் குடிநீர் ஆலைகளின் ஸ்டிரைக் வாபஸ்
சீல் வைக்கப்பட்ட கேன் குடிநீர் ஆலைகள் விண்ணப்பித்தால் 15 நாளில் பரிசீலிக்கும்படி ஐகோர்ட் உத்தரவிட்டதால், 7 நாட்களாக நீடித்த கேன் குடிநீர் ஆலைகளின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
சென்னை:
சட்டவிரோத குடிநீர் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து அனுமதி பெறாத குடிநீர் ஆலைகள் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்பட்டன. இதனைக் கண்டித்து கேன் குடிநீர் ஆலைகளின் உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கேன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், அதன் விலையும் கடுமையாக உயர்ந்தது.
இந்நிலையில் குடிநீர் ஆலை தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குடிநீர் ஆலைகள் தரப்பு வாதம், அரசு அளித்த அறிக்கை மற்றும் வாதங்களின் அடிப்படையில் நீதிபதிகள் இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர்.
‘சீல் வைக்கப்பட்ட அனுமதியற்ற குடிநீர் ஆலைகள் அனுமதி வேண்டி புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி கோரி விண்ணப்பிக்கும் கேன் குடிநீர் ஆலை நிர்வாகம், விண்ணப்பத்துடன், 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். விண்ணப்பித்தால் அவர்களுக்கு உரிமம் தருவது பற்றி 15 நாளில் அரசு பரிசீலிக்க வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சீல் வைக்கப்பட்ட ஆலைகள் விண்ணப்பித்தால் 15 நாளில் பரிசீலிக்கும்படி ஐகோர்ட் உத்தரவிட்டதால், 7 நாட்களாக நீடித்த கேன் குடிநீர் ஆலைகளின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இத்தகவைலை கேன் குடிநீர் ஆலைகளின் சங்க தலைவர் முரளி தெரிவித்தார்.
மேலும், சீல் வைக்கப்பட்ட குடிநீர் ஆலைகள் அனுமதி கோரி விரைவில் விண்ணப்பிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.