கோவை வடவள்ளியில் மசாஜ் சென்டரில் விபசாரம்- வாலிபர் கைது
வடவள்ளி:
கோவை வடவள்ளி நியூ கோல்டன் நகரை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் தொண்டாமுத்தூர் லட்சுமி நகர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் அவரிடம் தாங்கள் மசாஜ் சென்டர் வைத்துள்ளதாகவும், நீங்கள் விருப்பப்பட்டால் அழகிகள் உள்ளதாகவும் கூறினர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த கூலித்தொழிலாளி அவர்களிடம் பணம் எடுத்து வருவதாக கூறி விட்டு சென்றார். பின்னர் இதுகுறித்து வடவள்ளி போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் சாதாரண உடையில் அந்த பகுதிக்கு சென்றனர்.
அப்போது அங்கிருந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களில் ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ராஜ்கியூ மற்றும் சாஜு என்பதும் இவர்கள் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்கியூயை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மசாஜ் சென்டரில் இருந்த 2 அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.