செய்திகள்
ஆற்றில் மூழ்கி மாணவன் பலி

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

Published On 2020-02-04 18:09 GMT   |   Update On 2020-02-04 18:09 GMT
மாத்தூர் தொட்டிப்பாலத்தில் சுற்றுலா வந்த இடத்தில் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
திருவட்டார்:

குமரி மாவட்டம், திருவட்டார் அருகே சுற்றுலா தலமான மாத்தூர் தொட்டிப்பாலம் உள்ளது. இங்கு கேரளா மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் உள்பட ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பள்ளியில் இருந்து 167 மாணவர்கள் 5 ஆசிரியர்கள் ஒரு குழுவாக குமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தனர்.

இவர்கள் நேற்று அதிகாலையில் கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை கண்டு மகிழ்ந்த பின்பு, அங்கிருந்து மாத்தூர் தொட்டி பாலம் பார்க்க வந்தனர்.

பாலத்தின் இயற்கை அழகினை சுற்றி பார்த்த மாணவர்கள் கீழ் பகுதியில் உள்ள பரளியாற்றின் ஒரமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, அன்புராஜ் (வயது16) என்ற மாணவன் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி ஆற்றில் விழுந்தான். அவனை தண்ணீர் அடித்து சென்றது.

இதனை கண்ட பிற மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அருகில் நின்ற பொதுமக்கள் விரைந்து வந்து மாணவனை மீட்டு குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் அன்புராஜ் பரிதாபமாக உயிரிழந்தான். அவரது உடலை பார்த்து சக மாணவர்களும், ஆசிரியர்களும் கதறி அழுதனர்.

இது குறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார், மாணவனின் உடலை கைபற்றி உறவினர்களுக்கு தகவல் கொடுத்து விட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுற்றுலா வந்த இடத்தில் மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News