செய்திகள்
திருவள்ளூர் பஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்

ஓட்டல்-இனிப்பகம், கடைகளில் தரமற்ற உணவுப்பொருட்கள் பறிமுதல்

Published On 2020-02-04 10:19 GMT   |   Update On 2020-02-04 10:19 GMT
திருவள்ளூர் பகுதியில் கடைகளில் பரிசோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், 18 கிலோ தரமற்ற உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகளில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கவிக்குமார் மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வராஜ், லோகநாதன், சிவசங்கரன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர்.

அவர்கள் திருவள்ளூர் பஸ் நிலையம், சி.வி. நாயுடு சாலை, ஜெ.என். சாலை,பெரியகுப்பம் போன்ற பகுதிகளில் உள்ள இனிபகங்கள், போண்டா, பஜ்ஜி கடை என 27 இடங்களில் திடீரென ஆய்வு செய்தனர்.

அங்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் உணவுபொருட்களை எடுத்து சோதனை செய்தனர்.

இந்த சோதனையின்போது அங்குள்ள 14 கடைகளில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 18 கிலோ தரமற்ற உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக கடைக்காரர்களுக்கு ரூ.3100 அபராதம் விதிக்கப்பட்டது.

இதுபோன்ற சோதனைகள் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் என்று உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் கவிக்குமார் தெரிவித்தார்.

Tags:    

Similar News