தஞ்சை அருகே போலி மதுபாட்டில்களுடன் வாலிபர் கைது
வல்லம்:
தஞ்சை அருகே உள்ள மருங்குளத்தில் நேற்று வல்லம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மருங்குளம் நான்கு ரோடு பகுதியில் உள்ள வால்பட்டறை அருகே வாலிபர் ஒருவர் மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். போலீசார் சோதனையில் வாலிபரிடம் இருந்து மூடி திறந்த நிலையில் 5 மது பாட்டில்களை கைப்பற்றினர்.
அதை போலீசார் நுகர்ந்து பார்த்த போது அதில் விஷத்தன்மை கலந்த வாடை வந்துள்ளது. விசாரணையில் பிடிபட்ட வாலிபர் மருங்குளம் நேரு தெருவை சேர்ந்த வைஜேந்திரன் என்பவரின் மகன் விஜய் (வயது 22) என்பதும் அவர் எலெக்ட்ரீசியன் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து வல்லம் போலீசார், விஜய் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் 20 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மூடி திறந்த நிலையில் விஷதன்மையுடன் வாடை வந்த 5 மது பாட்டில்களை போலீசார் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.