செய்திகள்
புதுவையில் இன்று அதிகாலை பேக்கரி கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன.
புதுச்சேரி:
புதுவை பழைய சாரம் ஞானபிரகாசம் நகர் முதலாவது குறுக்கு வீதியை சேர்ந்தவர் கருணாகரன். இவர் அதே பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று அதிகாலை 4.10 மணிக்கு கடையில் இருந்து புகை மண்டலம் எழுந்துள்ளது. அதிகாலையில் அந்த பகுதியில் உறங்கிக்கொண்டிருந்த சிலர் இதனை பார்த்துள்ளனர்.
மேலும் அந்த வழியாக வந்த சிலரும் புகைமண்டலத்தை பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் உடனே விரைந்து சென்றனர். அதற்குள் தீ கொழுந்துவிட்டு எரிந்துள்ளது.
தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயிணை அணைத்தனர். இரண்டு தீயணைப்பு வாகனங்களில் இருந்து தண்ணீர் எடுத்து செல்லப்பட்டது. தீ விபத்தில் சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
இது குறித்து அறிந்த சட்டமன்ற உறுப்பினர் சிவா சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு கடை உரிமையாளர் கருணாகரனுக்கு ஆறுதல் கூறினார்.