செய்திகள்
பூண்டி ஏரிக்கு பாய்ந்து வரும் கிருஷ்ணா தண்ணீர்

பூண்டி ஏரிக்கு 102 நாட்களில் 4 டி.எம்.சி. கிருஷ்ணா நீர் வந்தது

Published On 2020-01-07 07:01 GMT   |   Update On 2020-01-07 07:01 GMT
102 நாட்களில் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 4.171 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.
ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

முதலில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட்டனர். தற்போது வினாடிக்கு 3,500 கனஅடி திறக்கப்படுகிறது.

கண்டலேறு அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 28-ந் தேதி முதல் இன்று காலை வரை 102 நாட்களில் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 4.171 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 28.82 அடியாக பதிவானது. 1481 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 480 கனஅடியாகவும், மழை நீர் வினாடிக்கு 171 கனஅடியாகவும் வந்தது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு 355 கனஅடியும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு 19 கனஅடியும் தண்ணீர் அனுப்பப்படுகிறது.

Tags:    

Similar News