செய்திகள்
சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் பலியான வழக்கு- வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு ஜாமீன்
மேட்டுப்பாளையம் அருகே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியான வழக்கில் வீட்டின் உரிமையாளருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியது.
மதுரை:
மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் பகுதியில் கடந்த 2-ம் தேதி சிவசுப்பிரமணியன் என்பவரின் வீட்டுச் சுவர் மழையால் இடிந்து விழுந்தது. இதனால் சுவரை ஒட்டியுள்ள வீடுகள் மீது சுற்றுச்சுவர் விழுந்ததால் அந்த வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த 17 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணியனை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணை முடிவடைந்த நிலையில், சிவசுப்பிரமணியனுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மறு உத்தரவு வரும் வரை மதுரையில் தங்கியிருந்து, மாவட்ட நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.