உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை- விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை
விருதுநகர்:
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. ஏராளமானோர் மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் பதவிகளை ஏலம் விடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள கோட்டைபட்டியில் பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏலம் விடுவதற்காக நடந்த கூட்டத்தில் வங்கி ஊழியர் சதீஷ்குமார் என்பவர்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளாட்சி பதவியை ஏலம் விடுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கிடையே விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடக்கூடாது. சமுதாயக்கூட்டம் நடத்தி வேட்பாளரை முன்கூட்டியே தேர்வு செய்யக்கூடாது. குறிப்பிட்ட வேட்பாளரின் வெற்றியை கூட்டம் நடத்தி தீர்மானிக்கக்கூடாது. இது தேர்தல் விதிகளுக்கு எதிரானது.
உள்ளாட்சி பதவியை ஏலம் விடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.