செய்திகள்
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் வெங்காயத்திற்கு ஈடாக பூண்டு விலை உயர்வு
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் வெங்காயத்திற்கு ஈடாக பூண்டு விலையும் களம் இறங்கி உள்ளது. ஒரு கிலோ ரூ.210-க்கு விற்பனை ஆகிறது.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச் சந்தையில் வெங்காயத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வெங்காயத்தின் விலை ஏற்றம் கண்டுள்ள நிலையில் போச்சம்பள்ளி சந்தையில் 1ம் தரம், 2ம் தரம், 3ம் தரம் என ரகத்திற்கு ஏற்றவாறு வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. தக்காளி தட்டுப்பாடு பிரச்சினை சற்று நீங்கியதற்கு அடுத்தபடியாக வெங்காயத்தின் விலை ஏற்றமடைந்துள்ளது.
இந்நிலையில் வெங்காயத்திற்கு ஈடாக பூண்டும் விலை உயர்வில் களம் இறங்கி இருக்கிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ பூண்டு ரூ.30-க்கு விற்பனை ஆனது. ஆனால், தற்போது 7 மடங்கு உயர்ந்து கிலோ ரூ.210-க்கு விற்பனை ஆகிறது. இந்த விஸ்வரூப விலையேற்றத்துக்கு விளைச்சல் மற்றும் வரத்து குறைவுதான் காரணம் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.