திண்டுக்கல்லில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
திண்டுக்கல்:
திண்டுக்கல் மேட்டுப்பட்டியை அடுத்துள்ள எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் ரமேஷ்குமார் என்ற சுள்ளான் ரமேஷ்(வயது 22). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் வழிப்பறி வழக்கில் ரமேஷ்குமாரை திண்டுக்கல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதேபோல், எரியோடு அடுத்துள்ள தொட்டணம்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் மல்லீஸ் முருகன்(26). இவர் மீது வடமதுரை போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் எரியோடு அருகே ஒருவரை பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்ய முயன்ற வழக்கில் மல்லீஸ் முருகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே ரமேஷ்குமார் மற்றும் மல்லீஸ் முருகன் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கைதான ரமேஷ்குமார் மற்றும் மல்லீஸ் முருகன் ஆகிய 2 பேரையும் குண்டர்சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.