செய்திகள்
சித்தரிப்பு படம்

ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வரும் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் மறுப்பா?

Published On 2019-10-23 11:15 GMT   |   Update On 2019-10-23 11:15 GMT
டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்காக வாகனத்தை ஓட்டிக்காட்ட ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்த இளம்பெண்ணுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் அனுமதி அளிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
சென்னை:

சென்னையை சேர்ந்த ஒரு இளம்பெண் சமீபத்தில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்காக வாகனத்தை ஓட்டிக்காட்டும் தேர்வுக்காக கே.கே.நகரில் உள்ள வட்டார போக்குவரத்து (ஆர்.டி.ஓ.) அலுவலகத்துக்கு வந்தார்.



ஜீன்ஸ் பேண்ட் மற்றும் ஸ்லீவ்லெஸ் (கை மறைக்கப்படாத) மேல்சட்டையுடன் வந்த அவரைப் பார்த்த வட்டார போக்குவரத்து அலுவலர்  இந்த உடையில் வாகனத்தை ஓட்டிக்காட்ட அனுமதிக்க முடியாது என்று மறுத்து விட்டதால் அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்தார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் அந்த பெண்ணுக்கு அவசியமாகவும் அவசரமாகவும் ஓட்டுநர் உரிமம் தேவைப்பட்டதால் உடனடியாக வீட்டுக்கு சென்று சால்வார் கம்மீஸ் அணிந்து வந்து தேர்வில் கலந்து கொண்டார்.

இதே அலுவலகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் மற்றொரு பெண்ணுக்கும் இதைப்போன்ற கசப்பான அனுபவம் நேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் இதுதொடர்பான தகவல் சில ஊடகங்களில் செய்தியாகி சமூக வலைத்தளங்களின் மூலம் வேகமாக பரவி வருகிறது.

வாகனம் ஓட்டிக்காட்ட இத்தகையை உடைகளைத்தான் அணிய வேண்டும், இவற்றை எல்லாம் அணியக் கூடாது என்று தனியாக எந்த விதிமுறைகளும் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை சட்டங்களில் குறிப்பிடப்படாத நிலையில் லைசென்ஸ் பெறுவதற்காக வரும் பெண்களை இப்படி இழிவுப்படுத்தும் வகையில் அலைக்கழிக்கும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு எதிராக பலர் கடுமையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News