செய்திகள்
கோப்பு படம்

ஆரல்வாய்மொழி அருகே 9-ம் வகுப்பு மாணவர் ரெயில் மோதி பலி

Published On 2019-10-15 09:27 GMT   |   Update On 2019-10-15 09:27 GMT
ஆரல்வாய்மொழி அருகே 9-ம் வகுப்பு மாணவர் ரெயிலில் அடிப்பட்டு பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

நெல்லை மாவட்டம் பணகுடி ஆர்.சி. கோவில் மேலத்தெருவை சேர்ந்தவர் மிக்கேல்வினோ. கூலி தொழிலாளி.

இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் புஷ்பராஜ் (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளிக்கு சென்ற புஷ்பராஜ் மாலையில் வீடு திரும்பினார். இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் புஷ்பராஜ் பணகுடி-ஆரல்வாய் மொழிக்கு இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். இது பற்றி நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். புஷ்பராஜ் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மனவருத்தத்தில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். புஷ்பராஜ் ரெயில் மோதி பலியானாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் பலியான புஷ்பராஜின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டிருந்தனர்.
Tags:    

Similar News