கோவை அருகே வாலிபரை தாக்கிய பெயிண்டர் கைது
கோவை:
கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பிரபு (23). இவர் அந்த பகுதியில் கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் ஸ்டீபன். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் உள்ளார்.சம்பவத்தன்று சந்தோஷ் ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். இதனை பார்த்த பிரபு, சந்தோஷை சத்தம்போட்டு வீட்டுக்குள் செல்லுமாறு கூறினார். இதனை ஸ்டீபன் பார்த்து விட்டார்.
நீ எப்படி என் மகனை விளையாட கூடாது என்று கூறுவாய் என பிரபுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த ஸ்டீபன் அங்கு கிடந்த பீர்பாட்டிலால் பிரபுவின் தலையில் பலமாக தாக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் பிரபு கொடுத்த புகாரின் பேரில் ஸ்டீபனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.