செய்திகள்
தற்கொலை

திருபுவனை அருகே மனைவியுடன் தகராறில் கார் டிரைவர் தற்கொலை

Published On 2019-09-27 12:34 GMT   |   Update On 2019-09-27 12:34 GMT
திருபுவனை அருகே மனைவியுடன் தகராறில் கார் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருபுவனை:

திருபுவனை அருகே கலிதீர்த்தாள்குப்பம் தொட்டி தெருவை சேர்ந்தவர் வசந்தி. இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில்  வேலைபார்த்து வருகிறார். இவரது மகன் கதிரவன் (வயது25).சென்னையில் கார் டிரைவராக வேலைபார்த்து வந்தார். இவருக்கும் குமளத்தை சேர்ந்த சீதா (21) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 மாதத்தில் அஜித் என்ற ஆண் குழந்தை உள்ளது. 

மனைவி மற்றும் குழந்தையை மாமியார் வீட்டில் தங்க வைத்துவிட்டு கதிரவன் சென்னைக்கு வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று வேலை முடிந்து கதிரவன் மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது கதிரவனிடம் அவரது மனைவி சீதா செலவுக்கு பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குகிடையே  வாய்த்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் உருவானது.  இதனால் மனைவியிடம்  கோபித்து கொண்டு கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார்.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த கதிரவன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் மாட்டு கொட்டகையில்  அவர் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கினார். வேலை முடிந்து வீடு திரும்பிய அவரது தாய்  வசந்தி மாட்டு கொட்டகைக்கு வந்து பார்த்த போது மகன் கதிரவன் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன்கதிரவனை தூக்கில் இருந்து  மீட்டு  அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி  ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கதிரவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
 
இது குறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், உதவி சப்- இன்ஸ்பெக்டர் சீனுவாசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News