போடி அருகே பணப்பிரச்சினையில் பிரியாணி கடையை சூறையாடிய கும்பல்: நகை-பணம் பறிப்பு
தேனி:
கேரள மாநிலம் மூணாறு சடகாரை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த ராமன் மகன் ரவி (வயது 40). இவர் போடி அருகே உள்ள பெரியாண்டவர் கோவில் தெருவில் மாரிமுத்து (45) என்பவருக்கு சொந்தமான இடத்தில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.
11 மாத அக்ரிமெண்ட் முடிந்த நிலையில் கடையை காலி செய்யும்படி மாரிமுத்து கூறியுள்ளார். அதற்கு ரவி தான் கடையில் பராமரிப்பு மற்றும் மராமத்து பணிகள் செய்துள்ளதாகவும் எனவே காலி செய்ய முடியாது என மறுத்துள்ளார்.
இதற்காக ரூ.1.75 லட்சத்துக்கு காசோலை ஒன்றயை மாரிமுத்து ரவியிடம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த காசோலை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று மாரிமுத்து மற்றும் அவரது ஆதரவாரளர்கள் கடைக்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கியதாகவும், 4 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணத்தை திருடிக் கொண்டு ரவி மீது கொலை மிரட்டல் விடுத்ததாக போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மாரிமுத்து உள்பட அவரது ஆதரவாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.