செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நாளை திறப்பு - எடப்பாடி பழனிசாமி

Published On 2019-08-20 06:49 GMT   |   Update On 2019-08-20 06:49 GMT
பாசனத்திற்காக பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நாளை திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய் மற்றும் கோடகன் கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.



அதை ஏற்று, 21.8.2019 முதல் 9.9.2019 முடிய 1000 மில்லியன் கனஅடி தண்ணீரை திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

மேற்கண்ட கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய வட்டங்களில் உள்ள கிராமங்களில் உள்ள கால்நடை மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் மற்றும், 24,090 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News