செய்திகள்
கொள்ளை

தேனி அருகே போலீஸ் போல் நடித்து நகை-பணம் கொள்ளை

Published On 2019-08-13 17:10 GMT   |   Update On 2019-08-13 17:10 GMT
தேனி அருகே போலீஸ் போல் நடித்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி:

தேனி அல்லிநகரம் வெண்கலாநகர் ஐஸ்கூல் பின்புறம் வசித்து வருபவர் முனியாண்டி (வயது62). இவர் சம்பவத்தன்று வீட்டில் தனது குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 2.30 மணி அளவில் ஒரு பெண் உள்பட 5 பேர் கதவை தட்டினர்.

முனியாண்டி யார்? என கேட்டபோது நாங்கள் போலீஸ்காரர்கள் என தெரிவித்தனர். இதனையடுத்து அவர் கதவை திறந்தபோது அந்த கும்பல் திடீரென வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது. முனியாண்டி அவரது மனைவி, மகன்களை அடித்து தாக்கி வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடினர்.

மேலும் அவரது மனைவி அணிந்திருந்த தோடு, மூக்குத்தி, மோதிரம், தாலிசெயின் ஆகியவற்றை பறித்துக்கொண்டு பீரோவில் இருந்த ரூ.4140 பணத்தையும், சில வங்கி புத்தகங்களையும் எடுத்துக் கொண்டனர்.

மேலும் அவரது வீட்டு அருகே முனியாண்டியின் மகள் பூங்கொடி வசித்து வருகிறார். அங்கும் அந்த மர்ம கும்பல் புகுந்து வீட்டில் இருந்த பத்திரங்களை தூக்கி சென்றனர்.

இது குறித்து தேனி ஜெ.எம். கோர்ட்டில் முனியாண்டி புகார் அளித்தார். தனது வீட்டில் ரூ.90 ஆயிரம் மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளைபோனது என தெரிவித்திருந்தார். கோர்ட்டு உத்தரவின்பேரில் தேனி அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News