செய்திகள்
விருதுநகர் அருகே கல்குவாரி தொழிலாளி மர்ம மரணம்
கல்குவாரி தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்தவர் பகவதி கண்ணன் (வயது 44). இவர் விருதுநகர் மாவட்டம் நக்கலக்கோட்டை பகுதியில் உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வந்தார். நேற்று பகவதிகண்ணன் அருகில் உள்ள கடம்பன் குளம் கோவில் விழாவிற்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில் கோவில் அருகே உள்ள ரோட்டு பாலத்தில் பகவதி கண்ணன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் ரத்த காயங்கள் காணப்பட்டன. இது குறித்து தகவலறிந்த சூலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பகவதி கண்ணன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது விபத்தில் இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.