செய்திகள்
செயின் பறிப்பு

மதுரை கூடல்புதூரில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 11 பவுன் பறிப்பு

Published On 2019-08-06 10:34 GMT   |   Update On 2019-08-06 10:34 GMT
மதுரை கூடல்புதூரில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 11 பவுன் தாலி செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை கூடல்புதூர் மலர் நகரைச் சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன். இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 50). இவர் நேற்று மாலை மொபட்டில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் சுப்புலட்சுமியை பின் தொடர்ந்தனர். ஆனையூர் பசுமைநகர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சுப்புலட்சுமியை மறித்து கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தாலிசெயினை பறித்துக் கொண்டு தப்பினர். இது தொடர்பாக கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செல்லூர் மீனாம்பாள்புரம் வ.உ.சி. குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (23). இவர் நேற்றிரவு அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி மணிகண்டனின் செல்போனை பறித்துச் சென்றனர்.

கீரைத்துறை ராஜம்மாள் நகரைச் சேர்ந்தவர் சப்பாணி முத்து (19). இவர் நேற்று நள்ளிரவு நல்லமுத்து பிள்ளை புதுத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் தருமாறு மிரட்டினர். ஆனால் சப்பாணி முத்து மறுக்கவே, மர்ம நபர்கள் கத்தியால் அவரை குத்தினர்.

செல்லூர் கே.வி.சாலை பகுதியில் சலீம் (46) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்றிரவு ஓட்டலுக்கு வந்த கண்மாய்க்கரையைச் சேர்ந்த ராஜா (24), பிரபு, கார்த்திக் ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி சலீமிடம் பணம் கேட்டுள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News