செய்திகள்
தஞ்சை அருகே தொழிலாளியிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது
தஞ்சை அருகே தொழிலாளியிடம் நகை பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சையை அடுத்த சானூரப்பட்டி மேல தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35). கூலி தொழிலாளி. இவர் தன் நண்பருடன் செங்கிப்பட்டியில் உள்ள ஒரு டீ கடையில் நின்று பேசி கொண்டிருந்துள்ளார். அப்போது சிவக்குமார் தான் தங்க தாயத்தை அடகு வைப்பதற்காக வந்துள்ளதாக தெரிவித்தார்.
பிறகு இருவரும் நடந்து சென்ற போது வாலிபர் ஒருவர் சிவக்குமார் பையில் வைத்திருந்த தங்க தாயத்தை திருடி கொண்டு ஓட முயன்றுள்ளார். சுதாரித்துக் கொண்ட சிவக்குமாரும் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிலரும் வாலிபரை மடக்கி பிடித்து செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் அவர் செங்கிப்பட்டியை அடுத்த மனையேரிப்பட்டி காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுபாஷ்சந்திர போஸ் (34) என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சுபாஷ் சந்திரபோசை கைது செய்தனர்.