செய்திகள்
குடிநீர் வினியோகத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

தினமும் 290 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

Published On 2019-07-15 18:23 GMT   |   Update On 2019-07-15 18:23 GMT
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் 290 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
கருர்:

கரூர் நகராட்சிக்குட்பட்ட ரெங்கநாயகிபுரம், பசுபதிலேஅவுட் பகுதி, தாந்தோன்றி குடியிருப்பு, பசுபதிபாளையம் அருணாச்சலநகர் உள்ளிட்ட பகுதிகளில் கரூர் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.16 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் தொட்டிகளுக்கு நீரை சேமித்து வைத்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் பணி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இந்த பணியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

வறட்சியை கருத்தில் கொண்டு, கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தடையின்றி சீராக குடிநீர் வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 53.26 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள கரூர் நகராட்சியில் தற்போதைய நிலவரப்படி சுமார் 2 லட்சத்து 42 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இதில் கரூர் பகுதிக்கு நெரூரில் இருந்தும், இனாம் கரூர் பகுதிக்கு வாங்கலில் இருந்தும், சணப்பிரட்டி மற்றும் தாந்தோன்றிமலை பகுதிகளுக்கு கட்டளையில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகளில் உள்ள நீர்உறிஞ்சும் மோட்டார்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு கொண்டுவரப்படும் குடிநீரானது கரூர் பகுதியில் உள்ள 12 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள், இனாம் கரூரில் உள்ள 5 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள், சணப்பிரட்டியில் உள்ள 13 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள், தாந்தோன்றியில் உள்ள 13 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் என கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகளில் ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

ஜெர்மன் பன்னாட்டு நிதி நிறுவனத்தின் மூலம் கரூர் பகுதியில் ரூ.24 கோடியே 67 லட்சம் மதிப்பிலான பணிகள் முடிக்கப்பட்டு தற்போது நாள் ஒன்றிற்கு 110 லட்சம் லிட்டர் குடிநீரும், தாந்தோன்றிமலை பகுதியில் ரூ.25 கோடியே 16 லட்சம் மதிப்பிலான பணிகள் முடிக்கப்பட்டு நாள் ஒன்றிற்கு 100 லட்சம் லிட்டர் நீரும் வழங்கப்படுகின்றது. இத்திட்டத்தின் மூலம் இனாம் கரூர் பகுதியில் ரூ.18 கோடியே 57 லட்சம் மதிப்பில் குடிநீர் வழங்கலுக்கான பணிகள் 60 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதோடு மட்டுமின்றி, கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 636 ஆழ்துளை கிணறுகள் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 59 ஆழ்துளை கிணறுகள் வறட்சி காரணமாக நீர் இன்றியும், பழுதடைந்தும் உள்ளது. இவ்வாறு ஆழ்துளை கிணறுகள் பழுதடைந்துள்ள பகுதிகளில் கரூர் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய ஆழ்துளைகிணறுகள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்தான் இன்று ரெங்கநாயகிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.16 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யப் பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி கரூர் நகரட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு தினமும் 290 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. அதாவது, ஒரு நபருக்கு நாளொன்றிற்கு 120 முதல் 125 லிட்டர் வரை வழங்கப்படுகிறது. வீடுகளில் மோட்டார் வைத்து நீர் உறிஞ்சுவது சட்டப்படி குற்றமாகும். பொதுமக்கள் அவ்வாறான செயல்களில் ஈடுபடாமல் இருக்க தற்போது, அனைத்து குடியிருப்புகளுக்குமான குழாய்கள் புதிதாக அமைக்கப்பட்டு அதில் மீட்டர் பொருத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மொத்தம் 45,928 குடியிருப்புகளுக்கு சீரான குழாய் அமைத்து மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த மீட்டர் பொருத்தப்படுவதால் மோட்டார் வைத்து நீர் உறிஞ்சுவது தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜேந்திரன் மற்றும் மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், மாவட்ட துணை செயலாளர் சிவசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.சி.க.ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News