செய்திகள்
மரணம்

வேடசந்தூர் அருகே கல் குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

Published On 2019-07-13 10:13 GMT   |   Update On 2019-07-13 10:13 GMT
வேடசந்தூர் அருகே கல் குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேடசந்தூர்:

வேடசந்தூர் பாரதிநகரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் சிவக்குமார் (வயது 11). கொசவபட்டியைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் பிரபு (11) இவர்கள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தனர்.

இன்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் சிவக்குமார், பிரபு மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் 7 பேர் வேடசந்தூர் - வடமதுரை ரோட்டில் லக்கனம்பாறை பகுதியில் உள்ள கல் குவாரி குட்டையில் குளிக்க சென்றனர். சிறுவர்கள் 7 பேரும் குளித்துக் கொண்டு இருந்த போது சிவக்குமாரும் பிரபுவும் நீரின் ஆழமான பகுதிக்கு சென்றனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாது என்பதால் தண்ணீரில் தத்தளித்தவாறு கூச்சலிட்டனர்.

உடனே மற்ற சிறுவர்கள் அவர்களை காப்பாற்றுவதற்காக முயன்றனர். ஆனால் அவர்கள் 2 பேரும் தண்ணீருக்குள் முழ்கினர். இதை பார்த்த அவர்கள் சத்தம் போட்டு அருகில் இருந்தவர்களை வரவழைத்தனர். பொதுமக்கள் ஒன்று திரண்டு தண்ணீரில் முழ்கியவர்களை வெளியே கொண்டு வந்தனர்.

ஆனால் அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இறந்து போன குழந்தையை பார்த்து கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் 2 சிறுவர்களின் உடல்களை வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

Tags:    

Similar News