செய்திகள்
ஸ்டெர்லைட் மூடப்பட்டதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளது- வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டு
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
சென்னை:
தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்தாண்டு மக்கள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆலையும் சீல் வைத்து மூடப்பட்டது.
இதனிடையே ஆலைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளது. ஒரே நேரத்தில் எப்படி 20,000பேர் கூடினார்கள் என தெரியவில்லை. போராட்டத்தை தூண்டியதும், போராட்டக்காரர்களுக்கு நிதியுதவி வழங்கியதும் சீன நிறுவனம் தான் என வேதாந்தா நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.