செய்திகள்
நடிகர் ராதாரவி மீண்டும் அதிமுகவில் இணைந்தார்
திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடிகர் ராதாரவி, இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
சென்னை:
சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது கருத்துக்கு திரையுலகினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனால் அவர் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். ராதாரவியின் பேச்சுக்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், நடிகர் ராதாரவி இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அவர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ராதாரவி மீண்டும் அதிமுகவுக்கு வந்ததை, முதல்வர் வரவேற்று வாழ்த்தினார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவின் தலைமையை விரும்பாத ராதாரவி, அந்த கட்சியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார். தற்போது திமுகவில் இருந்து நீக்கப்பட்டதால், அதிருப்தி அடைந்த அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.