செய்திகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை

Published On 2019-06-09 06:16 GMT   |   Update On 2019-06-09 07:27 GMT
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அஸ்தம்பட்டியில் உள்ள விருந்தினர் மாளிகையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சேலம்:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த 6-ந்தேதி (புதன்கிழமை) சேலம் வந்தார்.

7-ந்தேதி சேலம் ஏ.வி.ஆர்.ரவுண்டானா- சாரதா கல்லூரி சாலையில் கட்டப்பட்ட புதிய உயர்மட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

நேற்று எடப்பாடியில் உள்ள சரபங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை திறந்து வைத்தும், நைனாம்பட்டியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து இன்று காலை அஸ்தம்பட்டியில் உள்ள விருந்தினர் மாளிகையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை தீர்ப்பது குறித்தும், மாவட்டத்தில் அரசு திட்டப்பணிகள் செயல்படுவது குறித்தும் சில ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் கலெக்டர் ரோகிணி, மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதைதொடர்ந்து சேலம் மாநகர், மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது சேலம் பாராளுமன்ற தேர்தலில் தோல்விக்கான காரணம் என்ன? என கேட்டறிகிறார்.

தொடர்ந்து நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டறியும் எடப்பாடி பழனிசாமி  மாலை 4 மணிக்கு சேலத்தில் இருந்து காரில் புறப்பட்டு கோவைக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறார்.
Tags:    

Similar News