செய்திகள்

விக்கிரவாண்டி ஆம்புலன்ஸ் டிரைவர் கொலை- என்ஜினீயரிங் மாணவர் உள்பட 4 பேர் கைது

Published On 2019-06-08 11:18 GMT   |   Update On 2019-06-08 11:18 GMT
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ஆம்புலன்ஸ் டிரைவர் கொலை வழக்கில் என்ஜினீயரிங் மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வடகுச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 24). தனியார் ஆம்புலன்சு டிரைவர்.

சம்பவத்தன்று இரவு தினேஷ் குமார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை நுழைவுவாயில் எதிரே பெட்டிக்கடை நடத்தி வரும் முண்டியம்பாக்கம் காலனியை சேர்ந்த முருகையன் (50) என்பவரிடம் சென்று சிகரெட் வாங்கிவிட்டு ரூ.500 கொடுத்தார். அதற்கு முருகையன், 500 ரூபாய்க்கு சில்லறை இல்லை என கூறினார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் தினேஷ்குமார் ஆத்திரமடைந்து முருகையனை தாக்கினார். இதை தடுக்க வந்த முருகையனின் மனைவி செண்பகவள்ளி, மகன் அகிலன் ஆகியோரையும் தினேஷ்குமார் தாக்கினார்.

இதுபற்றி அறிந்த முருகையனின் மூத்த மகன் ஆகாஷ் (20) அங்கு விரைந்து சென்று தாக்குதலில் காயமடைந்த தனது தந்தை முருகையன், தாய் செண்பகவள்ளி, தம்பி அகிலன் ஆகிய 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

பின்னர் ஆகாஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து தினேஷ்குமாரை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின்பேரில் முருகையன், அவரது மகன் ஆகாஷ் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் முருகையன் (50), ஆகாஷ் (20), கலையரசன் (35), பார்த்திபன் (32) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஆகாஷ் மயிலம் அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
Tags:    

Similar News