செய்திகள்

குற்ற வழக்குகளில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய போலீசாருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2019-02-08 23:02 GMT   |   Update On 2019-02-08 23:02 GMT
வழிப்பறி உள்ளிட்ட குற்றவழக்குகளில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய, அடையாள அணிவகுப்பை நடத்த வேண்டும் என்று போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ChennaiHighcourt
சென்னை:

சென்னையில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த 2 பேரை வழிமறித்து, அவர்களிடம் இருந்து ரூ.70 ஆயிரம் ரொக்கப்பணம், கைக் கடிகாரம், மோட்டார் சைக்கிளை ஒரு கும்பல் கடந்த ஜனவரி 1-ந்தேதி வழிப்பறி செய்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த ஜனவரி 5-ந்தேதி வழிப்பறி கும்பலை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வழிப்பறி செய்த வாட்ச், மோட்டார் சைக்கிள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அரசு குற்றவியல் வக்கீல் கூறினார்.

ஆனால், மனுதாரர்கள் அப்பாவிகள், போலீசார் வேண்டுமென்றே இவர்களை கைது செய்துவிட்டனர். தேவையில்லாமல் 30 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளனர் என்று மனுதாரர்கள் தரப்பு வக்கீல் வாதிட்டார்.

பொதுவாக இதுபோன்ற வழக்குகளில், குற்றவாளிகளை பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அல்லது புகார்தாரர்களுக்கு தெரிவதே இல்லை. ஆனாலும், குற்றவாளிகளை போலீசார் கைது செய்து விடுகின்றனர்.



அதேநேரம் உண்மை குற்றவாளிகளை கண்டறிய அடையாள அணிவகுப்பை போலீசார் நடத்துவது இல்லை. அடையாள அணிவகுப்பு நடத்தி, பாதிக்கப்பட்டர்கள் மூலம் உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காட்டப்படவேண்டும். எனவே, இதுபோன்ற வழக்குகளில் அடையாள அணிவகுப்பை போலீசார் நடத்த வேண்டும். இந்த வழக்கில், புலன் விசாரணை முடியும் தருவாயில் உள்ளதால், மனுதாரர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குகிறேன்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #ChennaiHighcourt
Tags:    

Similar News