செய்திகள்

நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது கார் மோதி வியாபாரி பலி

Published On 2018-12-19 10:18 GMT   |   Update On 2018-12-19 10:18 GMT
நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது கார் மோதி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டறம்பள்ளி:

திருப்பத்தூர் ஆரிப் நகரை சேர்ந்தவர் இக்பால் (வயது 68). நூல்வியாபாரி. இவர் இன்று காலை நாட்டறம்பள்ளிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இக்பால் கடக்க முயன்றார். அப்போது கடப்பாவில் இருந்து கேராளா நோக்கி சென்ற கார் பைக் மீது மோதியது. இதில் இக்பால் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் எனவே இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கூறி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் அங்கு ½ மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கபட்டது.

Tags:    

Similar News