செய்திகள்

துரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம், விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி- தினகரன்

Published On 2018-12-14 09:40 GMT   |   Update On 2018-12-14 09:40 GMT
துரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம்; ஆனால் விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார். #SenthilBalaji #TTVDhinakaran
சென்னை:

கரூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி இன்று திமுகவில் இணைந்தார். தனது ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து கட்சியில் இணைந்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

தொண்டர்களை அரவணைத்துச் செல்பவர்தான் சிறந்த தலைவராக இருக்க முடியும். அந்த வகையில், திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினை சிறந்த தலைவராக நான் பார்க்கிறேன். அம்மாவின் மறைவுக்கு பிறகு ஒரு இயக்கத்தில் (அமமுக) பொறுப்பேற்று செயல்பட்டு வந்தேன். தற்போது தளபதியின் ஈர்ப்பால் அவர் முன்னிலையில் என்னை திமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டுள்ளேன்.

கரூர் மாவட்ட மக்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப என்னை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்த நிலையில் சென்னையில் டிடிவி தினகரன் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

சொந்த பிரச்சனைக்காக ஒதுங்கி இருப்பதாக கூறிய செந்தில் பாலாஜி திமுகவுக்கு சென்று விட்டார். துரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம்; ஆனால் விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி.



எந்த காலத்திலேயும் நான் துரோகிகளுடன் இணைய மாட்டேன். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடுக்கு வாய்ப்பே இல்லை.

எங்களது கட்சியில் இருந்து ஒருவரை இழுத்துவிட்டு அதற்கெல்லாம் திமுக விழா நடத்துகிறது. அமமுக கூடாரம் காலியாகவில்லை செந்தில் பாலாஜி திமுகவுக்கு சென்றதில் வருத்தம் கிடையாது.

அமமுக உறுப்பினர் சேர்க்கைக்கு செந்தில் பாலாஜி வாங்கிய விண்ணப்பங்களை தந்தால் நன்றாக இருக்கும். யாரையும் பிடித்து வைக்க முடியாது; எங்கிருந்தாலும் வாழ்க.

இவ்வாறு அவர் கூறினார். #SenthilBalaji  #TTVDhinakaran
Tags:    

Similar News