செய்திகள்

திருவண்ணாமலை ரெயிலில் பிணமாக கிடந்த பெண் யார்?- போலீசார் விசாரணை

Published On 2018-12-10 12:43 GMT   |   Update On 2018-12-10 12:43 GMT
திருவண்ணாமலையில் ஓடும் ரெயிலில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை:

மன்னார்குடியில் இருந்து திருப்பதி செல்லும் பாமினி எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று மதியம் 12 மணியளவில் திருவண்ணாமலை ரெயில் நிலையத்திற்கு வந்தது.

அங்கு காத்திருந்த பயணிகள் வேகவேகமாக ரெயிலில் ஏறினர். அப்போது, காலியாக இருந்த பெட்டி ஒன்றில் பயணிகள் ஏறியபோது, அங்கு பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஓடும் ரெயிலில் அவரை யாரோ அடித்து கொலை செய்து விட்டு சென்றுள்ளனர். பின்னர் இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் திருவண்ணாமலை ரெயில் நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பெண்ணின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, ரெயில் புறப்பட்டு சென்றது.

ரெயில் பெட்டியில் இறந்து கிடந்த பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. யாரோ மர்ம ஆசாமிகள் ரெயிலில் அவரை அடித்துக்கொலை செய்து விட்டு சென்றுள்ளனர். சுமார் 49 வயது மதிக்கத்தக்க அந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எங்கிருந்து வந்தார் என்பது குறித்த விவரம் தெரியவில்லை.

ரெயில் கொள்ளையர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றனர்.

ஓடும் ரெயிலில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தால் திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News