ஆண்டிப்பட்டி அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை கொள்ளை
ஆண்டிப்பட்டி:
மதுரை அருகே பனையூரைச் சேர்ந்தவர் நிர்மல்குமார் மனைவி மகேஸ்வரி (வயது 27). இவர் தனது மாமனார் மற்றும் மாமியாருடன் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளபுரத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு விஷேசத்துக்காக 27 பவுன் தங்க நகைகளை கைப்பையில் வைத்துக் கொண்டு பஸ்சில் வந்துள்ளார்.
மதுரையில் இருந்து ஆண்டிப்பட்டி சென்ற மகேஸ்வரி பஸ்நிலையத்தில் இறங்கி தனது கைப்பையை பார்த்த போது நகைகள் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இவர்களை நோட்டமிட்டு பின் தொடர்ந்த மர்ம நபர்கள் அசந்த நேரத்தில் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனால் செய்வதறியாது நின்ற மகேஸ்வரி மற்றும் அவரது உறவினர்கள் இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் நகை மாயமானது குறித்து திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த அமுதா (30), சஞ்சனா (32) ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகைகளை இவர்கள் கொள்ளையடித்தனரா? இவர்களுக்கு பின்பு கொள்ளை கும்பல் எதுவும் உள்ளதா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.