பாரம்பரிய பயணத்துக்காக ரூ.10¾ லட்சத்தில் மாட்டுவண்டி வாங்கிய தொழிலதிபர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் கிராமத்தில் வசிப்பவர் மார்கபந்து (வயது 58). இவர் பட்டு சேலை தயாரித்து விற்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
நவநாகரீக காலத்திலும் இவர் பழமையையே விரும்பி வருகிறார். சாதாரண கூலித்தொழிலாளி முதல் நிறுவன உரிமையாளர்கள் வரை மோட்டார்சைக்கிள், கார் போன்ற வாகனங்களில் பயணம் செய்யும் நிலையில் மார்கபந்து அதனையெல்லாம் விரும்புவதில்லை.
நமது பழமை, பாரம்பரியத்தை போற்றி பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் மாட்டுவண்டி வாங்க முடிவு செய்தார். அது தேக்குமரத்தில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என நினைத்த அவர் சேலத்திலிருந்து ரூ.8 லட்சம் மதிப்பில் ஆர்டர் கொடுத்து இரட்டை மாட்டுவண்டியை வாங்கினார். இந்த வண்டிக்காக ரூ.2¾ லட்சத்தில் 2 காங்கேயம் காளைகளையும் வாங்கினார்.
இந்த மாட்டு வண்டிக்கும், காங்கேய காளைகளுக்கும் தனது ஊரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பூஜை செய்தார். பின்னர் அந்த மாட்டு வண்டியில் குடும்பத்துடன் பயணம் செய்தார்.
பழைய ஜமீன் பரம்பரையை சேர்ந்தவர்களும் நிலக்கிழார்களும், நாட்டாண்மைகளும் இதுபோன்ற வண்டிகளில் பழங்காலத்தில் பயணம் செய்ததை பொதுமக்கள் சினிமாவில் மட்டுமே பார்க்க முடியும். இந்த நிலையில் மார்கபந்து தேக்குமரத்தினாலான மாட்டு வண்டியில் காங்கேய காளைகளை பூட்டி அதில் பயணம் செய்ததை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து பாராட்டினர். #Bullockcart