செய்திகள்

விழுப்புரம் அருகே மொபட் மீது கார் மோதல்- விவசாயி உடல் நசுங்கி பலி

Published On 2018-10-16 15:09 GMT   |   Update On 2018-10-16 15:09 GMT
விழுப்புரம் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 60) விவசாயி. இவரும் அதே பகுதியை சேர்ந்த ஞானசீலன் (48) என்பவரும் மொபட்டில் பிடாகத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி நேற்று இரவு 9 மணிக்கு சென்று கொண்டிருந்தனர்.

விழுப்புரம் ஊழியர் நகர் குடியிருப்பு பகுதிக்கு சென்றபோது மதுரையில் இருந்து ஒரு கார் வேகமாக வந்தது. அந்த கார் திடீரென்று முன்னால் சென்று கொண்டிருந்த மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் இருந்து விழுந்த புருஷோத்தமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஞானசீலன் படுகாயத்துடன் உயிர் தப்பினார். மேலும் அந்த காரை ஓட்டிவந்த சுந்தரபாண்டியன் (36) என்பவரும் காயம் அடைந்தார்.

விபத்து நடந்த ஒரு சில வினாடிகளில் பின்னால் இருந்து வந்த ஒரு மினி வேனும் இந்த கார் மீது மோதியது. இதில் காரும் வேனும் பலத்த சேதம் அடைந்தன. வேனில் இருந்த சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (21) என்பவரும் காயம் அடைந்தார்.

இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுந்து நின்றன. இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

அங்கு விபத்தில் காயம் அடைந்த ஞானசீலன், பிரகாஷ், சுந்தரபாண்டியன் ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News