செய்திகள்

அய்யங்கோட்டை பகுதியில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சலால் மக்கள் பீதி

Published On 2018-10-16 10:16 GMT   |   Update On 2018-10-16 10:16 GMT
திண்டுக்கல் மாவட்டம் அய்யங்கோட்டை பகுதியில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஆத்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் முழுவதும் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடும் பல இடங்களில் சாக்கடைகள் அள்ளாததால் சுகாதார கேடு ஏற்பட்டு பல இடங்களில் தொற்றுநோய் பரவி பலவித நோய்களை உண்டாக்குகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சித்தரேவு பகுதியில் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு பின்னர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஜெய் சந்திரன், மருதமுத்து மற்றும் ஊராட்சி செயலர் சிவராஜ் ஆகியோர் உதவியால் மருத்துவர்கள் முகாமிட்டு நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளித்தனர். அதன்பின்னர் இப்போது அங்கு காய்ச்சல் ஓரளவு குறைந்து இருக்கிறது .

பக்கத்து ஊராட்சியான அய்யங்கோட்டை புதூரில் கடந்த சில நாட்களாக சிலர் காய்ச்சலால் அவதிபட்டு வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் எங்கள் ஊராட்சிக்கு கிளார்க் இருக்கிறாரா? இல்லையா என்றே தெரியவில்லை. பல நாட்களாக சாக்கடைகள் அள்ளப்படுவதில்லை. இதனாலேயே பலர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறோம். கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது. குடிநீர் பற்றாக்குறை இருக்கிறது.

இதை எல்லாம் சுட்டிக்காட்டித்தான் எங்கள் தொகுதி எம்.எல்.ஏ. ஐ.பெரியசாமியிடம் தகவல் சொன்னதின் பேரில் அவரே நேரடியாக எங்கள் ஊருக்கு வந்து சாக்கடைகள் அள்ளப்படாததை பார்வையிட்டார்.

அதோடு அரசு மருத்துவமனைக்கும் சென்று எங்கள் காய்ச்சலால் அவதிப்படுவதை நேரில் சந்தித்தார். உடனே மருத்துவ குழுவை வரவழைத்து எங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து இருக்கிறார் என்றனர்.

Tags:    

Similar News