செய்திகள் (Tamil News)

நாகர்கோவிலில் 11-ம் வகுப்பு மாணவி மர்ம காய்ச்சலுக்கு பலி

Published On 2018-10-11 11:23 GMT   |   Update On 2018-10-11 11:23 GMT
நாகர்கோவிலில் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த 11-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில்:

பேச்சிப்பாறை வேப்ப மூட்டு விளையைச் சேர்ந்தவர் ஜெயதாஸ். இவரது மகள் அனிட்டா (வயது 16), இவர், நாகர்கோவிலில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட அனிட்டா, விடுதி அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து அவரது தந்தை ஜெயதாசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், இன்று காலை வந்து மகளை அழைத்துச் செல்வதாக விடுதி காப்பாளர்களிடம் தெரிவித்தார். இந்த நிலையில் அனிட்டாவிற்கு இன்று அதிகாலை காய்ச்சல் அதிகமானது. திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார்.

உடனே அனிட்டாவை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அனிட்டா, இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அனிட்டா இறந்தது குறித்த தகவல் அவரது தந்தை மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

அனிட்டா, பலியானது பற்றிய தகவல் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கு தெரிய வந்தது. அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

அனிட்டா பலியானது குறித்து நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News