செய்திகள்

கனமழை எதிரொலி - பழனியில் ரோப்கார் சேவை நிறுத்தம்

Published On 2018-10-04 10:32 GMT   |   Update On 2018-10-04 10:32 GMT
பழனியில் இன்று காலை முதலே பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது.
பழனி:

தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் சாரல்மழை தொடர்ந்து பெய்து வருகிறது. பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, செம்பட்டி, அய்யலூர், வேடசந்தூர், நத்தம் ஆகிய பகுதிகளில் இன்று காலை வரை தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் சிரமத்துடன் வெளியே சென்றுவந்தனர்.

மேலும் காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் அவதியடைந்தனர். பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்தேக்கங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தற்காலிக தீர்வு காணப்பட்டதாக பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால் விவசாயிகள் மும்முரமாக பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பழனி அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு 3 நிமிடத்தில் சென்றுவிடலாம் என்பதால் ரோப்காரில் செல்வதற்கு பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இன்று காலை முதலே பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது.

இயல்பு நிலை திரும்பிய பிறகு மீண்டும் ரோப்கார் சேவை தொடங்கும் என தெரிவித்தனர். வின்ச் வழக்கம்போல் இயங்கியதால் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. சில பக்தர்கள் மலைப்பாதை, யானைப்பாதை வழியாக மலைக் கோவிலுக்கு சென்றனர்.

Tags:    

Similar News